இருவரும் என் மாணவரே!


இருவரும் என் மாணவரே—————————–

“கோசலை மைந்தா ராமா விடியல் தோன்றித்துலங்குதே எழுந்தருள் உத்தம ஹரியே நடந்திடும் நல்லகாரியம்———————“

என்று காதிற்குள் புகந்த அந்த மென்மையான ஒலி சுப்பிரமணியத்தை கண் விழிக்கச் செய்தது. அவர் மெதுவாகத்தலையைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தார் அது மணி 6 ஜக்காட்டியது. வழமையாக சுப்பிரமணியம் தான் எல்லோருக்கும் முன் எழுந்து வானொலியில் செய்திகளை அலரவிடுவது வழக்கம் ஆனால் இப்போஅவரின் மகள் சஞ்சீவி விடுமுறையில் வந்திருந்ததால், இது அவள் ஆடசிக்காலம். அவள் விருப்பத்துக்குத்தான எல்லாமே நடைபெறும்.

சுப்பிரமணியம் படுக்கையை விட்டெழுந்து பல் துலக்குவதற்காகக் கிணற்றடிக்குச் சென்று விட்டார். அவர் திரும்பி வருவதற்குள் அவர் மனைவி மரகதம் பூஜை அறை வேலைகளையும் முடித்துவிட்டு தயாரிக்கப்பட்ட கோப்பியை பரிமாறுவதற்கு ஆயத்தமானாள், சஞ்சீவியும் முற்றத்தைப் பெருக்கித்துப்பரவு செய்து, பூமரங்களுக்கும் நீரூற்றி முடித்திருந்தாள். சுப்பிரமணியம் வழமைபோல் தேனீரை ரசித்துக்குடித்தபடி தன் அலுவலக
வேலைகளைச் செய்யத் தொடங்கினார். இந்த சிறிய தேனீர்க்கூடலில் இவர்கள் ஏதைப்பற்றியாவது அளவளாவிக் கொள்வது வழக்கம். பொதுவாக அது அன்றைய செய்தியில்
இருந்து பொறுக்கியவையாக இருக்கும். இன்றைய அவர்கள் பேச்சு பத்திரிகையாளர் நடேசனின் இறப்புப்பற்றிய சதியின் ஊகங்களைப் பற்றியதாக இருந்தது. அதனிடையே இவர்களின் தேடல்களைக் குழப்புவதாக
தொலை பேசி மணி தொல்லை கொடுத்தது. அதற்கு பதில்சொல்ல் சஞ்சீவிதான் தயாரானாள். ஏதிர்முனையில் ஒரு குரல் அவளின் “ஹலோ” வைக்கூட எதிர்பாராமல் தான் எடுத்ததின் அவசியத்தை முன் வைத்தது.
“ஹலோ நான் மாதவன் கதைக்கிறன் சேரிட்டைச் சொல்லுங்கோ இங்கை கீழ் வீட்டிலை இருக்கிறவர் ஓட ஓட விட்டு ஊசி போடுரார் எண்டு, அவருக்கு என்னிலை சரியான கோவம் அதுதான் அப்படிச்செய்யிறார், சேர் சொன்னா நிப்பாட்டிடுவார்…” சஞசீவியும் “சரி நான் அப்பாட்டைச் சொல்லுறனுங்கோ” என்றுவிட்டு அதை அப்படியே தந்தையிடம் ஒப்புவித்தாள். இது இவர்கள் வீட்டுக்கு அடிக்கடிவரும் ஒரு பரிதாபப்பிறவியின் மனு ஒப்புதல். ஆனால் இம்முனையில் அதன்பின் எல்லோரும் சில வினாடிகள் மௌனம் சாதிப்பார்கள், அல்லது அந்த மாதவனுக்காக சில அனுதாப வார்த்தைகளை செலவழிப்பார்கள்.
அவ்வளவுதான். ஆனால் சுப்பிரமணியத்தின் நெஞசில் மட்டும் இது நெருஞ்சி முள்ளாய்க் குத்திச்செல்லும். ஏனென்றால் மாதவன் அன்புடன் “சேர்”  என்று கூறியது சுப்பிரமணியத்தைத்தான்.
இன்றும் கூட சுப்பிரமணியத்தால் அந்த அழைப்பின் பின் சரியாக வேலை செய்ய முடியவில்லை. அவர் எழுத்தாணி முன்னோக்கி எழுத  முயன்றாலும் அவர் சிந்தனை மட்டும் பின்னோக்கிச் சென்று 10 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியை மீட்டுப் பார்க்கத் தொடங்கியது.

அது ஒரு தனியார் கல்வி நிலையம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறு நகர சபைப்பிரதேசத்தில் ஆண்டு 5 முதல் உயர்தரம் வரை கிட்டத்தட்ட 1000 மாணவர்களை உள் வாங்கிக் கொள்ளும் ஒரு சாதனைக்குரிய கல்வி நிலையம். அங்கே மாணவர்களுக்கு கல்வியைப்போதிப்பதை விட ஒழுக்கத்தை ஓதுவதே சிறந்தது என்று கருத்துடைய பொது நலப்பற்றாளர்களே அதிகம் ஆசிரியர்களாக இருந்தார்கள். ஓழுக்கம் சழைத்தால் கல்வி தானே சிறக்கும் என்பது அவர்கள் வாதம். அங்கே ஒவ்வொரு மாணவர்களும் கற்பிக்கப்பட்டார்கள் என்பதை விட வருங்காலத்தூண்களாக செதுக்கப்பட்டார்கள் என்றால் அது மிகைத்துப்போய்விடாது. ஓவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்துக்கு குறைந்தது 6 மாணவர்களையாவது அனுப்பி அது தன் தரத்தைப் பறை சாற்றிக்கொள்ளத் தவறியதில்லை. அது போல் குறைந்தது ஒருவராவது நாலுபாடங்களிலும் அதி விசேடசித்தி பெற்றுக்கொள்வார்கள் இப்படிப்பட்ட பெருமைக்குரிய கல்வி நிலையத்தின் தலைமை அதிபராக சுப்பிரமணியம்தான் இதன் ஆரம்பம் முதல் கடமை ஆற்றிவருகின்றார்.

ஆன்றொருநாள் சூரியன் சுகம் தேடி மேற்கே போகும் நேரம் சுப்பிரமணியம் வீட்டுப்படலை ஓரமாக ஒருவர் “சேர் சேர்——“ என்று அழைத்தபடி நின்றார். ஆழைப்பது யார் என இனம் கண்டுகொள்ள
மரகதம்தான் படலையடிக்குச்சென்றாள் அங்கே நின்று கொண்டிருந்தது மாதவன் தான். மாதவன்,; சுப்பிரமணியம் தலைமை ஆசிரியராகக் கடமை புரியும் கல்வி நிறுவனத்தின் சாதாரண தர வகுப்பு மாணவன். இப்போ முடிவடைந்த சாதாரண தரப்பரீட்சையில் இவனும் தோற்றியிருந்தான். ஊரில் எல்லோரும் சில நாட்களாக இவர்களுடைய பெறுபேற்றைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். மரகதமும்
” உள்ள வாங்கோ தம்பி சேர் பின்னாலை கிணத்தடியில நிக்கிறார் நான் கூப்பிட்டு விடுறன் நீங்கள் உள்ள வந்து இருங்கோ” என்று கூறிவிட்டுக் கணவனைக் கூப்பிட்டு விட்டாள். சுப்பிரமணியமும் மாதவனின் விஜயம் பற்றி முகம் மலர்வுடன் விசாரித்தார் ” என்ன மாதவன் இங்காலப் பக்கம் ரிசேள்ற் கிசேள்ற் ஏதும் வந்திட்டுதோ?”
மாதவனும் “ஓம் சேர் இப்பதான் வந்தது எனக்கு எட்டுப்பாடமும் டி சேர் அது தான உங்களட்ட சொல்ல வந்தனான் ரியுசனடிக்கு போனன் அங்கையிருந்து நீங்கள் இப்பதான் வீட்டுக்குப்போட்டியள் எண்டு
சொல்லிச்சினம்—–“
” நல்லம் தம்பி எனக்குத் தெரியும் நீங்களும், சிவாவும், சோமுவும் எட்டு டீ எடுப்பியள் எண்டு  வாழ்த்துக்கள் இதே வேகத்தோட ஏ லெவலையும் எடுத்து முடிச்சிட்டையள் எண்டால் நல்லம்
மற்றப்பிள்ளையளுக்கு எப்படி ரிசேள்ற?” என்று அக்றையாய் விசாரித்ததுடன் வாழ்த்தையும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தெரிவித்தார் சுப்பிரமணியம்.

மாதவனும் “சிவாவுக்கும் 8 டி ஆனால் சோமுவுக்குத்தான் பாவம் 6டியும் 2சியும் —-“
” ஆ! பாவம் சோமு நல்ல கெட்டிக்காரன் பரவாயில்லை இதுவும் குறைவில்லைத்தானே, தம்பி நீங்கள் அம்மா அப்பாவுக்குச் சொல்லீற்றியளோ ஓடிப்போய்ச் சொல்லுங்கோ நல்ல சந்தோஷப்படுவினம் “ என்று கூறியபடி
அந்த அன்பும் கீழ்ப்படிவும் நிறைந்த மாணவனை படலை வரை சென்று வழி அனுப்பிவைத்தார் சுப்பிரமணியம்.\
சில நாட்களிலேயே கல்விமன்றத்தில 90 ம் கல்வி வருட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. வீஞ்ஞானப்பிரிவில் மொத்தம் 6 மாணவர்கள் அதில் மாதவனும் ஒருவன்.
சிவாவும், சோமுவும் கணிதத்துறைக்கான வகுப்புக்களில் இணைந்து கொண்டார்கள். சுப்பிரமணியம்தான் தாவரவியல் வகுப்பை எடுத்தார். அதனால் ஒவ்வொரு உயிரியல் வகுப்புமாணவனின் நிலைப்பாடும் இவர்
கண்ணுக்கெட்டியதாய் இருந்தது. இவர் தன்னுடைய நியமப்படி மாதவனை ஒரு வருங்கால மருத்துவன் என்ற கணிப்பீட்டுக்குள் உள்ளடக்கிவைத்திருந்தார். இவர் மட்டுமல்ல மற்ற ஆசிரியர்கள் கூட மாதவனை அப்படித்தான் கணிப்பிட்டு வைத்திருந்தார்கள்.

90 ம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு என்னும் ஒன்பதோ பத்து மாதங்களே இருக்கும் வேளையிலேயே அமைதிப்படை என்ற பெயரில் கால் ஊன்றிய அராஜகப்படை ஊருக்குள் கால் ஊன்றி நிர்வாகம் நடத்தத்
தொடங்கியது. 1989 ஆண்டு ஓகஸ்ற் மாதம் 2 ம் திகதி அது தன் அகிம்சா சாயம் பூசிய முகத்தை பெற்றோலையும், மண்ணெண்ணையையும் ஊற்றிக் கழுவத்தொடங்கியது. அந்த சிறிய ஊரின் 64 உயிர்களைப் பலி கொண்டு முடிக்கும் வரை அது தன் அட்டகாசத்தை அரங்கேற்றியது பலரை உயிரோடு கொழுத்தியது, பல பெண்களின் கற்பைச் சூரை ஆடியது, வீடுகள் பலவற்றைத் தீக்கிரையாக்கியது, பலரைக் காணாமல்ப் போனோர் பட்டியலில் சேர்த்துக்கொண்டது. சுப்பிரமணியமும் ஒரு பாடசாலையின் அதிபராக இருந்தும் கூட கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் பின்  4 நாட்களுக்குப்பின்னே அவர் அரை உயிரில் விடுதலைசெய்யப்பட்டார்.

அதன் பின்  சுப்பிரமணியத்தால் 4 நாட்களுக்குள் அந்த ஊரில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறியக்கூடியதாய் இருந்தது. தன் ஜந்து மாதக் குழந்தையை இழந்த அபாக்கியசாலித்தாய், கணவனைப் பறிகொடுத்த இழம்
மனைவி, பிள்ளைகள் எல்லாவற்றையுமே ஒருசேர இழந்த தாய், தாய் தந்தையரை ஒருசேர இழந்த குழந்தைகள், குடும்பம் முழவதையும் பலி கொடுத்து தனிமரமாய் நிற்கும் பாடசாலை மாணவன் இன்னும் பலபல——.
ஊரே சாவீடாய்ப்போயிருந்தது. அப்போது மரகதமும் ஒரு குண்டைத்தூக்கிப்போட்டாள்.

“இங்கரப்பா உங்களட்டைப்படிக்கிற மாதவனின்ற அப்பாவையும் அண்ணாவையும் இந்தியனாமி கூட்டிக்கொண்டுபோய் சுட்டுப்போட்டாங்கள்  அதுகள் பாவங்கள்…” என்னுள் ஒரே அதிர்ச்சி ஆனாலும் உடல் தன் ரண வேதனையால் மன வேதனையைப் பிரதிபலிக்க முடியாமல் வெளிநடப்புக்காட்டியது.  அடுத்தனாள் சுப்பிரமணியம் மாதவனின் வீட்டுக்குத் துயர் பகிர்வுக்காகச் சென்றிருந்தார். மாதவனின் தாய் இவரைக் கண்டதும் கதறி அழுதாள்
” நான் என்ன செய்வன் சேர். இவன் மாதவனையும் இந்த ரெண்டு  பெட்டைகளையும் எப்படிக்காப்பாற்றப் போறன் எனக்கெண்டால் எல்லாம் சூனியமாக்கிடக்கு” என்று புலம்பினாள். மாதவன் ஒரு மூலையில் திகைத்துப்போய் இருந்தான்.
சுப்பிரமணியமும் அவன் முதுகை அன்புடன் வருடி ஆறுதல்ப்படுத்திவிட்டு விடை பெற்றுச் சென்றார். அந்த ஊரின் துயர் பகிர்வுகள் ஓய்வாதற்கு முன்பே மாதவனின் தாய,; சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள்
” சேர் மாதவனை இங்கை வைச்சிருக்க எனக்கெண்டால் பயமா இருக்கு , பேசாமல் என்ரை தம்பீட்டை கனடாவுக்கு அனுப்புவமோ எண்டு பாக்கிறன் அதுதான உங்களிற்றை யோசினை கேக்க வந்தன் தம்பியாக்கள் இவனை இந்தியாவுக்கு அனுப்பினா அங்கை இருந்து எடுப்பானுகளாம். என்ன சேர் இனி என்னாலை இவனை இங்கை வச்சுக்காப்பத்த ஏலாது. இவன் இந்தியன் எப்ப என்ன செய்வான் எண்டும் தெரியுதில்லை”
என்று கணவனையும, ஒரு மகனையும் இழந்த சோகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு எஞசிய குஞ்சுகளை அடைகாப்பது பற்றியதான தன் யோசனையின் நிலைப்பாட்டை முன்வைத்தாள்.
சுப்பிரமணியம் மாதவனின் வைத்தியராக வேண்டும் என்ற ஆசையை ஒரு புரம் வைத்துவிட்டு அந்தத் தாயின் நியாயமான தவிப்பு தன்பாட்டிலேயே தலை ஆட்டவைக்க
“ஓமருங்கோ நீங்கள் கனடாக்கு இவனை விட்டுப்படிப்பியுங்கோ அவன் கெட்டிக்காரன் எப்படியும் முன்னுக்கு வந்திடுவான் “ என்று ஒப்புவித்தார்.
மாதவன் இப் பயணத்தில் இருந்து விடுபட எவ்வளவோ முயற்சி செய்தான் ஆனாலும் அவனது இந்தியா நோக்கிய பயணம் நடந்தேறியது. அதன் பின் சிறிது காலத்திலேயே மாதவன் கனடா போய்விடுவான் என்று தாய் நம்பினாள்.

ஆனாலும் பல காலங்கள் இந்தியாவிலேயே காலத்தைக் கழித்தான் என்று அவன் நண்பன் சிவா மூலம் சுப்பிரமணியம் அறிந்து கொண்டார் அதன் பின் சிவாவும், சோமுவும் பொறியியல்ப் பீடம் சென்றுவிட காலம் அவரை
அவனைப் பற்றிய நினைவுகளில் இருந்து தள்ளி வைத்தது. எப்போதாவது மாதவனிடம் இருந்து கடிதம் வரும் அதில் அவன் படிக்கவசதி கிடைக்கவில்லை எனறோ என்னால் இங்கே படிக்கமுடியவில்லை என்றோ ஏதாவது எழுதியிருப்பான்.
சிலகாலங்களின் பின் மாதவனி  உறவினர் ஒருவர் மாதவனப்பற்றிய திடுக்கிடும் தகவல் ஒன்றைக்கூறினார்.

“சேர் அவன் இப்ப சாதுவாப் பைத்தியம் மாதிரித்தான். நான் நினைக்கிறன் அவனுக்கு படிப்பைக் குழப்பீற்று கூட்டிட்டுப் போனது அப்சற் போல பாவம் என்ன மாதிரி படிக்கக்கூடிய பொடியன் அனியாயமா பாழாப்போய்ற்றான் “
சுப்பிரமணியத்தால் அப்போதைக்கு அதைக் கேட்டு ஆச்சரியப்படவும், கவலைப்படவும் தான் முடிந்தது.

சில காலங்களின் பின சுப்பிரமணியமும் இடமாற்றம் கருதி மட்டக்களப்புக்கு வந்து விட்டார். 2000 ஆம் அண்டு ஒரு மாதவனின் உறவினர் மூலம் அவன் கொழும்பில் தான் இப்போது வசிப்பதாக அறிந்து கொண்டார்.
அதன் பின் ஒருதடவை அவனைப் பார்க்க என்று கொழும்பு சென்றிருந்தார். அப்போது மாதவன் அவரை முன்பிருந்த அதே கீழ்ப்படிவுடனும், மரியாதையுடனும் வரவேற்றான் ஆனால் ஏதோ சம்பந்தா நம்பந்தம் இல்லாதவற்றைப்பற்றி எல்லாம் கதைத்துக்கொண்டான். இடையே
” சேர் எல்லாரும் என்னை விசர் எண்டு சொலலியினம் நான் இல்லை எண்டு சொன்னா ஆரும் நம்பியினம் இல்லை, அம்மாவும் அப்படித்தான் நினைக்கிறா நான் படிக்கோணும் எண்டாலும் கேக்கிறா இல்லை”
இன்னும் பலவற்றைக் கதைத்துக் கொண்டான் அப்போது அவன் பாவித்த பெயர்கள் அவன் ஊரில் படித்தகாலப்பகுதியில் அவனுடன் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களாக இருந்தன. சுப்பிரமணியம் விடைகாணமுடியாத அவன் நிலைப்பாடு பற்றிய கேள்விகளுடன் விடைபெற்றுக்கொண்டார்.

அன்றில் இருந்து இன்றுவரை இப்படித்தான் அடிக்கடி தொலைபேசியில்  யாரையாவது தன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள் என்றுபட்டியலிட்டுக்கொள்வான். சுப்பிரமணியமும் அவ்வப்போது அறிவுரைகளை அள்ளி வழங்குவதுண்டு சிலவேளை எதுவும் பேசாமல் மௌனிப்பதும் உண்டு.
சுப்பிரமணியம் மாதவனின் சிந்தனையில் இருந்து சரியாக விடுபட்டுக்கொள்ள முன்னரே இன்னொரு முறை தொலைபேசி மணி அடித்தது. சஞசீவி தான் எடுத்தாள். பின்
“அப்பா உங்களுக்குத்தான் போன், போனிலை சுமன் அண்ணா”
சுமனும் சுப்பிரமணியத்தின் மாணவன் தான். இவர் அதிபராக இருந்த கல்லூரியில் கல்வி பயின்றவன். இப்போது லண்டனில் இருக்கின்றான். சுமன் எப்போதும் தன்னுடைய ஊர், தன்னுடைய பாடசாலை என்று மிகவும் பற்றுக் கொண்டவன். இப்போது இவனின் பாடசாலை முன்னேறிக்கொண்டு வருகின்றதென்றால் அதில் இவனுக்கும் கணிசமான பங்களிப்பு உண்டு. சுப்பிரமணியம் தான் இணைப்பில் வந்து விட்டதை அடையாளம்
காட்டிக்கொள்ள “ஹலோ”  என்று குரல் கொடுத்தார். அதன் பின் மறுமுனை பேசத்தொடங்கியது.
” சேர் நான் சுமன் கதைக்கிறன் 8 ஆம் திகதி ஸ்கூல் பெயர்மாற்றுற பங்சன் எல்லாம் ஒழுங்கு பண்ணி முடித்து விட்டார்களாமா?. பிரதம அதிதியைக் கூப்பிடிறது என்ன மாதிரி?————————“

என்று பலவற்றை அடிக்கிக்கொண்டே போனார். அக் கேள்விகளுக்கெல்லாம் சுப்பிரமணியமும் பொறுப்புடன் பதிலளித்தார். சிறிது நேரம் அவர்கள் சம்பாசனை சுமன் படித்த பாடசாலையை பெயர் மாற்றுவதற்கான
விழாபற்றியதாக இருந்தது. சுமன் சுப்பிரமணியத்தின் குடும்ப சுக துக்கங்களையும் அக்கறையுடன் விசாரிப்பது வழக்கம் இன்றும்
” சேர் உங்கடை வீடு மாறுற அலுவல் என்ன மாதிரி சரிவந்திட்டுதோ, கூட அற்வான்சு கேட்டாலும் யோசிக்காமல் சொல்லுங்கோ சேர் நான் அனுப்பிறன் என்னையும் உங்கடை பிள்ளைமாதிரி நினைச்சு நீங்க
கேக்கலாம்”
அந்த அன்பான மாணவனின் கூற்றுக்கள் இவர் கண்களில் நீரைக்கூட வரவளைத்திருந்தன
“இல்லை சுமன் காசுப்பிரச்சினை இல்லை ரவுனுக்குள்ள எங்களுக்கு அளவான வீடு எடுக்கிறதுதான் கஸ்ரமாயிருக்கு நன்றி சுமன் நீங்கள் இவ்வளவு அக்கறையாகக் கேட்டதுக்கு.” என்று கூறி அந்த மாணவனிடம்
இருந்து விடைபெற்றுக்கொண்டார்.
சுமனின் தொலைபேசி மாதன் பற்றிய சுமையை பெரிதும் இறக்கிவைத்துவிட்டதாக உணர்ந்தார் சுப்பிரமணியம்.

ஓரு மாணவனோ கால ஓட்டத்தில் ஓடம் தொலைந்து கரைசேர முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறான். இன்னோரு மாணவனோ தான் கரைசேர்ந்தது மட்டுமல்லாமல் மற்றவர்களும் கரை சேர உதவி செய்து கொண்டிருக்கிறான். இதில் இருவருமே சுப்பிரமணியம் மேல் பாசமும், மரியாதையும் வைத்த நற் குணம் நிறைந்த மாணவர்கள். ஆனல் ஒருவன் சுப்பிரமணியத்தின் மனதில் சுமையாகக்
கனத்துக்கொண்டிருக்கின்றான் மற்றையவன் சுகமாக சுமை இறக்க முயல்கின்றான். இருந்த போதும் இருவருமே சுப்பிரமணியத்தின்
மாணவர்களே.————–!
முற்றும்

இது உண்மைச்சம்பவங்களின் கோர்வையாக இருந்தபோதும் இதில் தோன்றிய பாத்திரங்கள் வெறும் கற்பனையே…..

என்னால் 2000 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதை – பழைய CD களை ஆராய்ந்த போது கிடைத்தது… தொலைந்து போன எழுத்துக்ளின் ஒருசிறு துளி…. கிடைத்தது அப்படி மகிழ்ச்சி – பகிர்ந்து கொள்கிறேன் உங்கள் எல்லோரோடும்….
(அவுஸ்திரேலி தமிழர் சங்கத்தால் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டிக்காக அனுப்பப்பட்டு பருசு எதையும் பெற்றுக்கொள்ளாத பெருமைக்குரிய சிறுகதை…..:) “

 

4 thoughts on “இருவரும் என் மாணவரே!

  1. ஜேகே says:

    தமிழினி அழகான கதை, யாழ்ப்பாணத்து மொழிநடை சரளமாக வருகிறது. ஆசிரியர்கள் வாழ்க்கையில் பல தரப்பட்ட மாணவர்கள் கடந்து போவர். ஆனால் ஆசிரியருக்கு அந்த மாணவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மாணவர்களே! அதை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ஒரு சின்ன கருத்து. கதையின் நாதம் அந்த knot தான் என்ற போது, அதை சுற்றியே கதை நகர்ந்து இருக்கலாமோ? சஞ்சீவி பாத்திரம் கதையில் ஏனோ? எனக்கு கொஞ்சம் புரியவில்லை.

    • வல்வைத் தென்றல் says:

      நீங்கள் சொல்வது உண்மைதான் ஜேகே…! அனுபவம் இல்லாததன் வெளிப்பாடாய் இருக்கலாம் பத்துவருடங்களுக்குப்பின் இதை வாசித்தபோது இதில் இருக்கும் பிழைகள் பிரள்வுகள் எல்லாம் புரிந்தது. ஆனால் படைப்பை அப்படியே பிரசுரிப்பது நல்லதாக இருக்கும் என்பதால் விட்டுவிட்டேன்….
      (என்னிலிருந்து கதையைத்தொடக்கிவிட்டேன், அதனால் நானும் கதைக்குள் வந்துவிட்டேன். )

  2. menu says:

    Very good story, As you say it’s a true story, You can’t find these type of teacher or student now a days…. We lost the “KURUKULAM” word….!

Leave a reply to Jehan Cancel reply